Published : 16 Nov 2023 09:08 AM
Last Updated : 16 Nov 2023 09:08 AM

நிஜார் கொலை வழக்கில் கனடா ஆதாரம் கொடுத்தால் விசாரணைக்குத் தயார்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

பிரிட்டன் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

லண்டன்: சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கனடா உரிய ஆதாரம் கொடுத்தால் விசாரணை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஊடகப் பேட்டி ஒன்றில் அவர், "நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை பலமுறை கனடாவிடம் எடுத்துரைத்துவிட்டோம். கனடாவின் அரசியல் இந்தியாவில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் சக்திகளுக்கு ஆதரவாக இருக்கிறது. இந்தியாவில் வன்முறையைத் தூண்டுவோருக்கு கனடா அரசியலில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் எண்ணங்கள வெளிப்படையாகச் சொல்லும் சுதந்திரத்தை கனடா கொடுத்துள்ளது.

அந்தச் சுதந்திரம் எதுவரை சென்றுள்ளது என்றால் எங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகள் தாக்கப்படும் வரை சென்றுள்ளது. கனடாவுக்கான இந்திய துணைத் தூதரே தாக்கப்பட்டார். தூதரகத்தின் மீது புகை குண்டுகள் வீசப்பட்டன. எங்களது அதிகாரிகள் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டனர். அதற்கு சாட்சி இருக்கிறது. ஆனால் அதன்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பேச்சு சுதந்திரத்துக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் பொறுப்புணர்வு என்ற வேலி உள்ளது. இந்த சுதந்திரங்களை துஷ்பிரயேகம் செய்வதும், அரசியல் ஆதாயத்துக்காக அந்த விதிமீறல்களை அரசே சகித்துக் கொள்வதும் மிகவும் தவறானதாகும்.

நிஜார் கொலை வழக்கில் இதுவரை எவ்வித ஆதாரமும் இந்தியாவிடம் பகிரப்படவில்லை. உங்களால் அப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கும் அளவுக்குக் காரணம் இருந்தால் அதற்கான ஆதாரத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் ஆதாரங்களைக் கொடுத்தால் நாங்கள் விசாரணையை மேற்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் அவர்கள் இன்னும் கொடுக்கவில்லையே!" என்றார்.

சர்ச்சையின் பின்னணி: இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என அவர்களின் போட்டோக்களுடன் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "இந்திய அரசாங்க முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. " என்று கூறினார்.

பிரதமரின் பேச்சைத் தொடர்ந்து, பேசிய வெளியுறவு அமைச்சர், "நாங்கள் இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிகையை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளோம். அவர் இந்தியாவின் வெளிநாடு புலனாய்வு அமைப்பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவின் (RAW) தலைவராக செயல்பட்டவர்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x