Published : 02 Jan 2018 08:02 AM
Last Updated : 02 Jan 2018 08:02 AM

தெலங்கானா மாநிலத்தில் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் விநியோகம்

தெலங்கானாவில் விவசாயத்துக்கு 24 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் நேற்று அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 23 லட்சம் பம்பு செட்டுகளை இயக்க இலவசமாக மின்சாரம் விநியோகிக்கப்படும்.

இந்த திட்டத்தை தெலங்கானா மாநிலம், மெட்சல் கல்காஜ்கிரி மாவட்டம், ஷமீர் பேட்டையில் மாநில மின் விநியோக திட்ட அதிகாரி ரகுமா ரெட்டி தொடங்கி வைத்தார். இதுகுறித்து முதல்வர் கே. சந்திரசேகர ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தெலங்கானாவில் மின் பற்றாக்குறை என்ற நிலை மாறி தற்போது தன்னிறைவை எட்டியுள்ளோம். சூரிய மின் சக்தி உற்பத்தியில் நாட்டின் முதலிடத்தில் தெலங்கானா உள்ளது. இதைத் தொடர்ந்து தெலங்கானா மாநில விவசாயத்துக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதை புத்தாண்டின் பரிசாக விவசாயிகள் கருதுகின்றனர். இதன் மூலம் 23 லட்சம் பம்பு செட்களுக்கு இலவச மின்சாரம் விநியோகம் செய்யப்படும்.

விவசாய இலவச மின்சார திட்டத்துக்காக மின் விநியோக கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.12,316 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 514 துணை மின் நிலையங்கள், 1,724 மின் மாற்றிகள் அமைக்கப்படும்.

சில மாநிலங்களில் சில மணி நேரம் மட்டுமே விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மேலும் சில மாநிலங்களில் 24 மணி நேரமும் விவசாயத்துக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டாலும், அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாட்டிலேயே 24 மணி நேரமும் விவசாயத்துக்காக இலவசமாக மின்சாரம் வழங்குவது தெலங்கானா மாநிலம் மட்டுமே.

நாட்டின் தனிநபர் மின் நுகர்வு 1,200 யூனிட்டாக உள்ளது. தெலங்கானாவைப் பொறுத்தவரை தனிநபர் மின் நுகர்வு 1,505 யூனிட்டாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x