Published : 10 Jul 2014 10:45 AM
Last Updated : 10 Jul 2014 10:45 AM
திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் குறித்து தகாத வார்த்தையை பேசிய பாஜக எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணமூல் எம்.பி. ககோலி கோஷ் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டில் மேற்கு வங்க மாநிலம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும், ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர். அப்போது, அக்கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் குறித்து பாஜக எம்.பி.க்கள் சிலர் தகாத வார்த்தையை பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இரு கட்சியினருக்கும் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது.
பாஜக எம்.பி.க்களை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தின்போது பாஜக எம்.பி. க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ககோலி கோஷ் கூறினார்.
விலைவாசி உயர்வு தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் ககோலி கோஷ் தஸ்திதார் கூறியதாவது: “மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை திரிணமூல் காங்கிரஸ் பெண் உறுப்பினர்கள் குறித்தும், மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குறித்தும் தகாத வார்த்தைகளை பேசிய பாஜக எம்.பி.க்களை வன்மையாக கண்டிக்கிறேன். அந்த எம்.பி்.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து பாஜக எம்.பிக் களுக்கும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவையை நடத்திக்கொண்டிருந்த கே.வி.தாமஸ், இருதரப்பையும் சமாதானம் செய்து விலைவாசி உயர்வைப் பற்றி மட்டும் பேசுமாறு ககோலி கோஷை வலியுறுத்தினார்.
இதையடுத்து ககோலி கோஷ் பேசும்போது, “ரயில் பயணிகள் மற்றும் சரக்குக் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு போன்றவை அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால், ஏழைகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு, ரயில்வே பட்ஜெட்டில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT