தலைமை தகவல் ஆணையராக: ஹீராலால் சமாரியா பதவியேற்பு

ஹீராலால் சமாரியா
ஹீராலால் சமாரியா
Updated on
1 min read

புதுடெல்லி: நாட்டின் தலைமை தகவல் ஆணையராக பதவி வகித்த யஷ்வர்தன் குமார் சின்ஹா, கடந்த அக்டோபர் மாதம் ஓய்வுபெற்றார். இதையடுத்து தகவல் ஆணையராக பணியாற்றி வந்த ஹீராலால் சமாரியா, புதிய தலைமை தகவல் ஆணையராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய தகவல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள முதல் தலித் சமூகத்தவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

1985-ம் ஆண்டு பேட்ச், தெலங்கானா கேடர் அதிகாரியான சமாரியா, கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். மத்திய தகவல் ஆணையத்தில் தற்போது 2 தகவல் ஆணையர்கள் மட்டுமே உள்ளனர். 8 தகவல் ஆணையர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

பதவியேற்கும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் பதவி வகிப்பார்கள்.

பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் உள்ளிட்டோரின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய தகவல் ஆணையரை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in