Published : 29 Jan 2018 08:28 PM
Last Updated : 29 Jan 2018 08:28 PM
நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட எம்.பி.க்களாக பிஜூ ஜனதா தளம் கட்சியின் மகதாப், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தினேஷ் திரிவேதி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டில் இருந்து நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்களுக்கான விருது வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதனால், யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்நிலையில், சிறந்த எம்.பி.க்களை தேர்வு செய்ய அமைப்பக்கப்பட்ட குழு கடந்த 5 ஆண்டுகளுக்கான சிறந்த எம்.பி.க்களைத் தேர்வு செய்தனர்.
இந்த குழுவில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மாநிலங்கள் அவைத் துணைத் தலைவர் பிஜே குரியன், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் தலைவர் ராம் பகதூர் ராய் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் எப்படி விவாதிக்கிறார்கள், அனுபவம், பல்வேறு பிரச்சினைகளில் இருக்கும் விழிப்புணர்வு, ஆழமான அறிவு உள்ளிட்ட விஷயங்கள் ஆய்வு செய்து விருது வழங்கப்படுகிறது.
இதன்படி, கடந்த 2017ம் ஆண்டுக்கான விருது பிஜூ ஜனதா தளம் கட்சியின் எம்.பி. பார்துருஹரி மகதாப் தேர்வு செய்யப்பட்டார். 2016ம் ஆண்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. திணேஷ் திரிவேதியும், 2015ம் ஆண்டு சிறந்த எம்.பி.யாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மாநிலங்கள் அவையின் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத்தும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், முன்னாள் எம்.பி. நஜ்மா ஹெப்துல்லா 2013ம் ஆண்டுக்கான சிறந்த எம்.பி.யாகவும், 2014ம் ஆண்டுக்கான சிறந்த எம்.பி.யாக ஹக்முக்தேவ் நாராயண் யாதவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT