Published : 06 Nov 2023 01:26 PM
Last Updated : 06 Nov 2023 01:26 PM

கேரளா குண்டு வெடிப்பு சம்பவம்: பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

கேரள குண்டு வெடிப்பு

கொச்சி: கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மோலி ஜாய் (61 வயது) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இன்று (திங்கள்கிழமை) காலை உயிரிழந்தார்.

கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள மதவழிபாட்டு தளத்தில் கடந்த 29ஆம் தேதி காலை 9 மணியளவில் நடந்த குண்டு வெடிப்பு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் பயங்கர வெடி விபத்துகள் ஏற்பட்டன. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் 12 வயது சிறுமி லிபினா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சோதனை நடத்த தேசிய புலனாய்வு அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டு அக்டோபர் 31ஆம் தேதி எர்ணாகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மோலி ஜாய் (61 வயது) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் 70% தீக்காயங்களுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து களமச்சேரி குண்டு வெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 11 பேரில் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சரணடைந்தவர் வாக்குமூலம்: ஜெபக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை தொடர்ந்து, கொச்சி பகுதியை சேர்ந்த டோமினிக் மார்ட்டின் (52) என்பவர் கொடைகாரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘‘யெகோவாவின் சாட்சிகள் சபையில் கடந்த 16 ஆண்டு களாக உறுப்பினராக இருக்கிறேன். சபை உறுப்பினர்கள், மதக் கொள்கையில் இருந்து விலகிச் சென்றதால், அவர்களது ஜெபக் கூட்டத்தில் குண்டு வைத்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

‘‘கொள்கை, கோட்பாடுகளில் இருந்து விலகி, சதிகார சபையாக மாறி, பொய்யை பரப்பி வருகின்றனர். இதை தடுப்பதற்காகவே குண்டுகளை வெடிக்கச் செய்தேன்’’ என்று, முன்னதாக சமூக வலைதளத்தில் நேரலை வீடியோ பதிவையும் அவர் வெளியிட்டிருந்தார். ஆனால், ‘‘டோமினிக் எங்கள் சபையை சேர்ந்தவர் அல்ல. அவர் யாரென்றே தெரியாது’’ என யெகோவாவின் சாட்சிகள் சபை நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x