Published : 10 Jan 2018 09:50 AM
Last Updated : 10 Jan 2018 09:50 AM
நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு, பிரதமர் மோடியின் அரசு அச்சுறுத்தலாக உள்ளது என தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி கூறினார்.
உ.பி.யின் சஹரான்பூர் மாவட்டத்தில் தாக்கூர் - தலித் சமூகத்தினர் இடையிலான மோதல் தொடர்பாக, ‘பீம் ஆர்மி’ என்ற தலித் அமைப்பின் நிறுவனர் சந்திரசேகர் ஆசாத் (30) கடந்த ஆண்டு ஜூன் மாதம் இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யக் கோரி, டெல்லி நாடாளுமன்ற சாலையில் குஜராத்தின் வட்காம் தொகுதி எம்எல்ஏவும் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
இதில் ஜிக்னேஷ் மேவானி பேசும்போது, “இங்கு எங்கள் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தது குஜராத் மாதிரி அரசியலுக்கு உதாரணம். சந்திரசேகர் ஆசாத்தை விடுதலை செய்ய வேண்டும், அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வேண்டும் என்று கேட்பதற்கான கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருக்கு இந்த உரிமை கூட இல்லை என்றால் இது குஜராத் மாதிரி அரசியலே ஆகும். நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு, பிரதமர் மோடியின் அரசு அச்சுறுத்தலாக உள்ளது” என்றார்.
கன்னையா குமார், ஷைலா ரஷீத், உமர் காலித் உள்ளிட்ட, ஜேஎன்யு-வின் முன்னாள், இந்நாள் மாணவர் சங்கத் தலைவர்கள், நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், அசாம் விவசாயிகள் சங்கத் தலைவர் அகில் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT