Published : 15 Jul 2014 08:41 AM
Last Updated : 15 Jul 2014 08:41 AM

மாநில அரசு விடுவிக்காமல் மத்திய அரசு பணியில் எப்படி சேர்ந்தார்?: அர்ச்சனா ராமசுந்தரம் வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

‘ஒரு ஐபிஎஸ் அதிகாரியை மாநில அரசு பணியிலிருந்து விடுவிக்காத நிலையில், அவரால் எப்படி மத்திய அரசுப் பணியில் சேர முடிந்தது?’ என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்த ஆவணங்களை 17-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர் பதவியில் இருந்தார். இவரை மத்திய அரசுப் பணியான சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அவரை விடுவிக்க தமிழக அரசு மறுத்து விட்டது.

அதை பொருட்படுத்தாமல், அர்ச்சனா ராமசுந்தரம் கடந்த மே 8-ம் தேதி சிபிஐ கூடுதல் இயக்குநர் பொறுப்பில் சேர்ந்தார்.

இதை எதிர்த்து வினித் நாராயணன் என்பவர் தொடர்ந்த பொதுநல மனுவில், ‘உயர் பதவிகளில் அதிகாரிகளை நியமிப்பதற்கென மத்திய கண்காணிப்பு ஆணையம் தலைமையில் குழு உள்ளது. இக்குழு மேற்குவங்க அதிகாரியான ஆர்.கே.பச்னந்தாவை பரிந்துரை செய்தது. ஆனால் மத்திய அரசு அதை நிராகரித்துவிட்டு, குழு பரிந்துரை செய்யாத அர்ச்சனா ராமசுந்தரத்தை இப்பதவியில் நியமித்தது. இந்த நியமனம் சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அர்ச்சனா ராமசுந்தரம் செயல்பட இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் சந்திர மவுலி கே.பிரசாத், ரோஹின்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி ஆஜராகி, சிபிஐ உயர் அதிகாரியை நியமிப்பதில் ஒரே ஒரு நடைமுறை மட்டுமே பின்பற்றப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில், ‘‘அர்ச்சனா ராமசுந்தரத்தை தமிழக அரசுப் பணியில் இருந்து விடுவிக்கவே இல்லை. அதை மீறி அவர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்துள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, ‘‘தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரி மாநில அரசு பணியிலிருந்து விடுவிக்காத நிலையில், எப்படி மத்திய அரசில் சேர முடிந்தது. இது அர்த்தமற்றதாக உள்ளது. இதுகுறித்த ஆவணங்களை வரும் 17-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x