Published : 30 Oct 2023 09:21 PM
Last Updated : 30 Oct 2023 09:21 PM

மராத்தா இடஒதுக்கீடு | மகாராஷ்டிராவில் வலுக்கும் போராட்டம் - சிவசேனா எம்.பி.க்கள் இருவர் ராஜினாமா

மும்பை: மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் விசுவாசிகளாக அறியப்பட்ட சிவசேனா எம்.பி.க்கள் இருவர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ஹிங்கோலி எம்.பி ஹேமந்த் பாட்டீல், நாசிக் எம்.பி ஹேமந்த் கோட்சே ஆகிய இருவர்தான் மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவாக ராஜினாமா செய்துள்ளனர். எம்.பி ஹேமந்த் பாட்டீல் தனது ராஜினாமா கடிதத்தை மக்களவை செயலகத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில், ஹேமந்த் கோட்சே தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு அனுப்பியுள்ளார். இவர்கள் இருவரும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் தீவிர விசுவாசிகளாக சொல்லப்பட்டவர்கள். மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், எம்.பி.க்கள் இருவரும் ராஜினாமா முடிவை எடுத்துள்ளனர்.

ராஜினாமா தொடர்பாக பேசிய ஹிங்கோலி எம்.பி ஹேமந்த் பாட்டீல், "லோக்சபா சபாநாயகர் அலுவலகத்தில் இல்லாததால், எனது ராஜினாமா கடிதம் அலுவலக செயலரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ராஜினாமாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இடஒதுக்கீடு கோரி யவத்மாலில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் எம்.பி ஹேமந்த் பாட்டீலை தடுத்து நிறுத்தி இடஒதுக்கீடு விவகாரத்தில் அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த கூறினர்.

இதையடுத்து, இடஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவாக பதவி விலகப்போவதாக அறிவித்து, அந்த இடத்திலேயே தனது ராஜினாமா கடிதத்தை தயார் செய்து போராட்டக்காரர்களிடம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நாசிக்கில், உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த மற்றொரு எம்.பி கோட்சே தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

பின்னணி: மராத்தா சமூகத்தினரை சமூக, கல்வி ரீதியாக பின் தங்கிய வகுப்பினராக (Socially and Educationally Backward - SEBC) அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு தர கடந்த 2018-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதனையடுத்து, மகாராஷ்டிராவின் மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது அமைதி ஊர்வலம், தொடர் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை அவர்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, மராத்தா சமூக தலைவர்களின் ஒருவரான மனோஜ் ஜராங்கே கடந்த ஆகஸ்ட் மாதம் ஜல்னாவில் உள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இதையடுத்து, செப்டம்பர் 1-ம் தேதி போலீசார் இங்கு நடத்திய தடியடி நடத்தியது பேசுபொருளாக மாறியது. இதைத் தொடர்ந்து, மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை தீவிரமடைந்ததையொட்டி, அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மனோஜ் ஜராங்கேயை நேரில் சென்று சந்தித்து மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து கடந்த மாதம் 14-ந் தேதி ஜாரங்கே தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார். அதோடு இந்த மாதம் 24-ம் தேதிக்குள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்று காலக்கெடு கொடுத்திருந்தார். அது தற்போது முடிவடைவத்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x