Published : 27 Oct 2023 07:02 PM
Last Updated : 27 Oct 2023 07:02 PM

பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை இந்தியா கொண்டிருக்கிறது: அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஹைதராபாத்: பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை இந்தியா கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் இன்று நடைபெற்ற 75-வது ஆர்ஆர் தொகுப்பு ஐபிஎஸ் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆற்றிய உரை விவரம்: "75-வது ஆர்ஆர் தொகுப்பு பயிற்சி அதிகாரிகளுக்கு இன்று மிகவும் முக்கியமான நாள். நாட்டின் சுதந்திரத்தின் நூற்றாண்டின்போது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பின் பொறுப்பு அவர்களின் கைகளில் இருக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் அமிர்தகால தீர்மானத்தை நிறைவேற்றும் திசையில் 75 ஆர்ஆர் தொகுப்பு பயிற்சி அதிகாரிகள் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல சர்தார் படேல் மிகவும் சிந்தனையுடன் இந்த அகாடமிக்கு அடித்தளம் அமைத்தார். நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்து அமிர்த காலத்திற்குள் நுழைந்துள்ள நிலையில் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு அவற்றைச் சாதனைகளாக மாற்ற பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பூடான், மாலத்தீவு, மொரீஷியஸ், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட 175 பேர் அடிப்படை படிப்பை முடித்துவிட்டு இன்று இங்கிருந்து தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த 175 பேரில் 34 பேர் பெண் அதிகாரிகள்.

வரும் நாட்களில் உள்நாட்டு பாதுகாப்பைக் கையாள்வதில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கும். இந்திய காவல்துறையை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உலகிலேயே மிகவும் சிறந்ததாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்று ஒரு பெண் அதிகாரி சிறந்த பயிற்சி அதிகாரிக்கான விருதைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மோடியின் தலைமையின் கீழ், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது. நாட்டின் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்காக மோடி அரசு சமீபத்தில் 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தது.

பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் நக்ஸலைட் வன்முறை போன்ற சவால்களை நாடு நீண்ட காலமாக எதிர்கொண்டு வருகிறது. எனினும், கடந்த 10 ஆண்டுகளில், நமது துணிச்சலான காவல்துறையினரின் முயற்சியால், அவற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கிடைத்துள்ளது. நமது சவால்கள் இன்னும் முடிவடையவில்லை. திட்டமிட்ட குற்றங்கள், இணையதள குற்றங்கள், மாநிலங்களுக்கு இடையிலான குற்றங்கள், சர்வதேச நிதி மோசடிகள் போன்ற பல புதிய சவால்கள் இன்று நம் முன் நிற்கின்றன. போதைப்பொருள் கடத்தல், கிரிப்டோ கரன்சி, ஹவாலா வர்த்தகம் போன்ற சவால்களுக்கு எதிராக அதே வீரியத்துடன் நாம் போராட வேண்டும்.

நாட்டின் ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர்களாக காவல் துறை அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும். பணியமர்த்தப்படும் இடத்தின் உள்ளூர் மொழி, பாரம்பரியம் மற்றும் வரலாற்றை மதித்து, அந்த மக்களின் உணர்வைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும். நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் உள்நாட்டு பாதுகாப்பு பெரிய அளவில் மேம்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள், இடதுசாரி தீவிரவாத பகுதிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய நாட்டின் மூன்று முக்கியப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைமையை மேம்படுத்துவதில் அரசு மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக சமரசமற்ற கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது" என்று அமித் ஷா உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், தெலங்கானா ஆளுநர், மத்திய உள்துறை செயலாளர், உளவுத் துறை இயக்குநர், சிபிஐ இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x