Last Updated : 24 Jan, 2018 01:14 PM

 

Published : 24 Jan 2018 01:14 PM
Last Updated : 24 Jan 2018 01:14 PM

ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வல்கரை அழைத்து ஆலோசனை நடத்திய பிரதமர் சாஸ்திரி: அத்வானி கருத்தால் சர்ச்சை

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக பதவி வகித்தபோது, அப்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் குரு கோல்வல்கரை அடிக்கடி வரவழைத்து ஆலோசனை நடத்தினார் என பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையான ஆர்கனைசரின் 70வது ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி சிறப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பத்திரிகையில் தொடக்க காலத்தில் பணியாற்றிய பாஜக மூத்த தலைவர் அத்வானி தனது அனுபவங்களை கட்டுரை ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘ஆர்கனைசர் பத்திரிக்கையில் நான் பணியாற்றியபோது அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை பலமுறை சந்தித்து பேசினேன். அப்போது அவர் நேர்மறையான எண்ணத்துடன் எண்ணை அணுகினார். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. நாட்டின் முதல் பிரதமர் நேருவை போல், சாஸ்திரி ஆர்எஸ்எஸ் மற்றும் ஜனசங்கத்தை விரோதியாக பார்க்கவில்லை.

சாஸ்திரி பிரதமராக இருந்தபோது, அப்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் குரு கோல்வல்கரை நேரில் அழைத்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் ஆலோசனை கேட்டார். சாஸ்திரி தனது பதவிக்காலம் முழுவதும் ஆர்எஸ்எஸ்வுடன் நல்லுறவை பேணி வந்தார்’’ எனக்கூறினார்.

லால் பகதூர் சாஸ்திரி 1964 முதல் 1966ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். அவர் சிறந்த மக்கள் தலைவர் என ஆர்எஸ்எஸ்சின் தற்போதைய தலைவர் மோகன் பகவத் கடந்த ஆண்டு புகழ்ந்து கூறியிருந்தார்.

இந்நிலையில், லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது, குரு கோல்வல்கரை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தியதாக அத்வானி தற்போது கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x