Published : 26 Oct 2023 11:03 AM
Last Updated : 26 Oct 2023 11:03 AM

கர்நாடகாவில் சாலை விபத்து: ஒரு குழந்தை உட்பட 13 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் சாலை விபத்து

கர்நாடகா: கர்நாடகா மாநிலம், சிக்கபல்லப்பூர் பகுதியில், டேங்கர் லாரி - கார் மோதிய விபத்தில் ஒரு குழந்தை உள்பட13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று (அக்.26) அதிகாலை நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகா மாநிலம், சிக்கபல்லப்பூர் பகுதியில், நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது, டாடா சுமோ மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்திருக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலை 44-ல் உள்ள சிக்கபல்லப்பூர் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு முன்பாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பனிமூட்டத்தால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது நடத்தப்பட்ட சோதனையில், டாடா சுமோ காரில் பயணித்தவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இறந்தவர்களில் பலர் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 8 ஆண்கள், 4 பேர் பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவதாக பல வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்தனர். போலீஸார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x