Published : 05 Jan 2018 09:05 AM
Last Updated : 05 Jan 2018 09:05 AM

முத்தலாக் மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு - கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு

முத்தலாக் தடை மசோதாவை தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் கூட்டத் தொட ரின் கடைசி நாளான இன்று மசோதா நிறைவேறுமா என்பது கேள்விக் குறியாகி உள்ளது.

முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது மனைவியை உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் (முத்தலாக்) முறையை தடை செய்ய வகை செய்கிறது. இதை மீறும் ஆண்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் மசோதா வகை செய்கிறது.

இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்த மசோதாவை மாநிலங்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அப்போது, நன்கு பரிசீலித்து தேவையான மாற்றங்கள் செய்ய ஏதுவாக மசோதாவை மாநிலங்களவை தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தக்கோரி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது மசோதாவுக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து அமளி நிலவியதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலையில் இந்த மசோதா மீது மாநிலங்களவையில் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதாவை மாநிலங்களவை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அமளி நிலவியது. இதனால் அவை ஒத்திவைக் கப்பட்டது.

எதிர்கட்சிகள் ஒத்துழைக்குமா?

குறிப்பாக, இந்த சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் பிரிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக சம்பந்தப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்பட்டால் அவரது குடும்பத்தினர் கையறு நிலைக்கு தள்ளப்படுவார்கள் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

ஆனால், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் லாபம் கிடைக்கக் கூடாது என கருதும் அரசு, இந்த மசோதாவை தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவதில்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளது. அதேநேரம் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது.

இதனிடையே குளிர்கால கூட்டத் தொடர் இன்றுடன் முடிவதால், இன்றும் இதுதொடர்பாக எந்த முடிவம் எட்டப்படவில்லை என்றால், இந்த மசோதாவை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிறைவேற்ற அரசு முயற்சி மேற்கொள்ளும்.

அடுத்த கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, இந்த மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x