Last Updated : 27 Jan, 2018 05:47 PM

 

Published : 27 Jan 2018 05:47 PM
Last Updated : 27 Jan 2018 05:47 PM

உ.பி.யின் ஐபிஎஸ் அதிகாரியான தமிழருக்கு சிறந்த காவல் பணிக்கான அரசு விருது

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணிபுரியும் தமிழரான ஜி.முனிராஜுக்கு சிறந்த காவல் பணிக்கான பாராட்டுப் பதக்கம் விருது வழங்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு புலந்த்ஷெஹரில் நடைபெற்ற விழாவில் இந்த விருந்து அவருக்கு வழங்கப்பட்டது.

நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் சிறப்பாகப் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளைப் பாராட்டி மத்திய அரசால் விருது வழங்கப்படுகிறது. குடியரசு தினத்தன்று வழங்கப்படும் இதுபோன்ற விருதுகள் உ.பி. சார்பிலும் தனியாக வழங்கப்படுகின்றன. கடந்த 2015 ஆம் வருடம் முதல் வழங்கத் தொடங்கிய இந்த விருதுகள் வெள்ளி மற்றும் தங்கம் என இருகட்டப் பிரிவுகளாக அளிக்கப்படுகின்றன. சிறந்த காவல் பணி செய்தமைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்படுகிறது. வெள்ளிப்பதக்கம் பெற்ற பின் சிறந்த காவல் பணி செய்பவர்களை பாராட்டி தங்கப்பதக்கம் அளிக்கப்படுகிறது.

இதன்படி, இந்த வருடம் உபியில் 250 வெள்ளி மற்றும் 150 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் வெள்ளிப்பதக்கங்களில் ஒன்றாக தமிழரான ஜி.முனிராஜ் என்பவருக்கும் நேற்று வழங்கப்பட்டது. 2009-ம் வருட ஐபிஎஸ் அதிகாரியான முனிராஜ் உ.பி. மாநில பிரிவு அதிகாரியாக உள்ளார். இவருக்கான விருதினை உ.பி.யின் தலைநகரான லக்னோவில் டிஜிபியான ஓம் பிரகாஷ்சிங் அனுப்பியிருந்தார். இதை முனிராஜுக்கு புலந்த்ஷெஹரின் குடியரசு தின விழாவில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட அந்தத் தொகுதியின் பாஜக எம்.பி.போலாசிங் வழங்கினார்.

உ.பி.யின் மேற்குப்பகுதியில் உள்ள புலந்த்ஷெஹர் எனும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக முனிராஜ் பணியாற்றுகிறார். வழிப்பறி, கொள்ளை மற்றும் பாலியல் பலாத்காரக் குற்றங்களுக்கு பெயர் போன மாவட்டமாக இது உள்ளது. இதனால், சிறந்த காவல்பணி அதிகாரியாகப் பெயர் பெற்ற முனிராஜை அம்மாவட்டத்தில் கடந்த வருடம் மே மாதத்தில் பணியமர்த்தப்பட்டார். அப்போது முதல் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோரை பிடிப்பதில் முனிராஜ் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

அப்போது 15 முறை அவர் மீது குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருந்தனர். இதன் தற்காப்பிற்காக முனிராஜ் திருப்பி சுட்டதில் இரண்டு குற்றவாளிகள் பலியாகி உள்ளனர். உ.பி. அரசால் இனாம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த 54 கிரிமினல் குற்றவாளிகள் முனிராஜால் கைது செய்ய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர் பணியாற்றும் புலந்த்ஷெஹர் மாவட்டம், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதில் உ.பி.யில் சிறந்ததாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விவசாயக் குடும்பத்தில் பிறந்து அதன் பாடப்பிரிவில் எம்.எஸ்.சி பயின்ற முனிராஜ் தர்மபுரியின் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர்.

உ.பி.யில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒன்பது பேர் தமிழர்களாக உள்ளனர். இவர்களில் இருவர் மட்டுமே மூத்தவர்கள். இளைய அதிகாரிகளான அந்த தமிழர்களை உ.பி.யின் பதட்டமான மற்றும் கிரிமினல் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிக்கவனம் எடுத்து அமர்த்தி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x