கோப்புப்படம்
கோப்புப்படம்

முசாபர்நகரில் பதிவு செய்யப்படாத மதரஸாக்களுக்கு தினமும் ரூ.10,000 அபராதம்: உ.பி.கல்வித் துறை நோட்டீஸ்

Published on

லக்னோ: உத்தர பிரதேசத்தில் சுமார் 24,000 மதரஸாக்கள் செயல்படுகின்றன. இவற்றில் 8,000 மதரஸாக்கள் அங்கீகாரம் பெறாதவை. சுமார் 4,000 மதரஸாக்களுக்கு வெளிநாட்டு நிதி கிடைக்கிறது. இவற்றில் பல இந்திய-நேபாள எல்லைப் பகுதியில் உள்ளன.

இந்த மதரஸாக்கள் சட்ட விரோதமாக பெறும் வெளிநாட்டு நிதி தீவிரவாத நடவடிக்கைகள், அல்லது கட்டாய மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படுகிறதா என சிறப்பு புலனாய்வு குழு(எஸ்ஐடி) ஆய்வு செய்யவுள்ளது. இவற்றை கண்காணிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் முசாபர்நகரில் அங்கீகாரம் இன்றி நடத்தப்படும் மதரஸாக்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என உ.பி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து ஆரம்ப கல்வித்துறை அதிகாரி சுபம் சுக்லா கூறுகையில், ‘‘முசாபர்நகரில் பதிவு செய்யப்படாமலும், அங்கீகாரம் பெறாமலும் நடைபெறும் மதரஸாக்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன’’ என்றார்.

சட்டவிரோதம்: இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜமியத்- இ-உலாமா-ஹிந்த் அமைப்பு விடுத்துள்ள செய்தியில், ‘‘கல்வித்துறையின் இந்த உத்தரவு சட்டவிரோதம்’’ என கூறியுள்ளது. இதன் செயலாளர் மவுலானா ஜாகிர் உசைன் கூறுகையில், ‘‘மதரஸாக்கள் மாணவர்களுக்கு இலவச கல்வியை அளித்து வருகின்றன. அவர்களால் நாள்ஒன்றுக்கு ரூ.10,000 அபராதம் செலுத்த முடியாது. கல்வித்துறை இந்த உத்தரவு சட்டவிரோதமானது’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in