Published : 05 Jan 2018 10:10 AM
Last Updated : 05 Jan 2018 10:10 AM

மேகாலயா அரசியலில் சலசலப்பு: பாஜக அணியில் சேர்ந்த 5 காங். எம்எல்ஏக்கள்

மேகாலயாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் விலகிய 5 எம்எல்ஏக்கள் உள்பட 8 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜக கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் கட்சியில் நேற்று இணைந்தனர்.

60 உறுப்பினர்களைக் கொண்ட மேகாலயா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தச் சூழ்நிலையில், முதல்வர் முகுல் சங்கா மீதான அதிருப்தி காரணமாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை வரிசையாக ராஜினாமா செய்து வருகின்றனர். இவ்வாறு, கடந்த மூன்று வாரங்களில் மட்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 7 பேர் ராஜினாமா செய்தனர். இதனால், மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 30-லிருந்து 23 ஆக குறைந்தது. எனினும், 9 சுயேச்சைகளின் ஆதரவு இருப்பதால் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய 7 எம்எல்ஏக்களில் 5 பேர், மத்தியில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் தேசிய மக்கள் கட்சியில் நேற்று அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.

அவர்களுடன் மற்ற சிறிய கட்சிகளைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் அக்கட்சியில் சேர்ந்தனர். ஷில்லாங்கில் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கொனார்ட் கே. சங்மா தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், அவர்கள் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

இதுகுறித்து கொனாட் கே. சங்மா கூறும்போது, “மேகாலயா மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சியை அவர்கள் தூக்கியெறிய தயாராகிவிட்டனர்.

இதே மனநிலையில்தான், காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களும் இருக்கிறார்கள் என்பது தற்போது தெளிவாகியுள்ளது. கட்சியில் இணைந்த புதியவர்களுக்கு எனது வாழ்த்துகள். நாம் ஒன்றிணைந்து மாற்றத்தை உருவாக்குவோம் ” என்றார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளும் காங்கிரஸிலிருந்து பல எம்எல்ஏக்கள் விலகி வருவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x