“மத்திய அரசு என்னை கைது செய்யாததற்கு காரணம் இருக்கிறது’’ - சத்தீஸ்கர் முதல்வர்

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல்
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல்
Updated on
1 min read

சத்தீஸ்கர்: மத்திய அரசுக்கு எந்த வாய்ப்பையும் நான் கொடுக்காததே அவர்கள் என்னை கைது செய்யமல் விட்டதற்குக் காரணம்; இல்லாவிட்டால் அவர்கள் என்னை விட்டுவிடுவார்களா என்ன? என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்டத் தேர்தல் நவம்பர் 7-ம் தேதி 20 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 17-ம் தேதி 70 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. ஐந்து மாநிலத் தேர்தலையொட்டி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் சூறாவளி பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலத்தைக் கைப்பற்ற பாஜக தீவிரமாகக் களம் இறங்கி இருக்கிறது.

இந்த நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ராய்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான அரசு தனது அதிகாரத்தையும், மத்திய அமைப்புகளையும் தவறாகப் பயன்படுத்துகிறது. பாஜக-விடம் பொதுமக்களைக் கவரும் எந்த திட்டங்களும் இல்லை. எனவே அவர்கள் தொடர்ந்து மாநில அரசை அவதூறு செய்ய முயல்கிறார்கள். அதிகாரத்தைப் பெறுவதற்காக அவர்கள் மிகவும் கீழ்நிலைக்கு வந்துவிட்டார்கள்.

நவம்பர் 1-ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் இயக்கம் தொடங்கவிருக்கிறது. இதற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், நேற்று சத்தீஸ்கரில் உள்ள மத்திய ஏஜென்சிகள் அங்கிருக்கும் அரிசி ஆலைகளில் சோதனை மேற்கொண்டன. அரசாங்கத்தை அவதூறு செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகளின் நிதி இழப்பைப் பற்றி பாஜக சிந்திக்கவில்லை. என்னை கைது செய்வதற்கு எந்த வாய்ப்பும் நான் அவர்களுக்கு வழங்கவில்லை. இல்லாவிட்டால், அவர்கள் என்னை விட்டுவிடுவார்களா என்ன?’’ எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in