

இந்தியாவின் முதல் பெண் இமாமாக நியமிக்கப்பட்ட ஜமீதா, முத்தலாக் முறை ஒழியும்வரை தனது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்திருக்கிறார்.
இஸ்லாமிய மதகுரு இமாமாக ஆண்களே நியமிக்கப்படுவர். ஆனால், இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் முதன்முறையாக பெண் ஒருவர் இமாமாக நியமிக்கப்பட்டார். இவர், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இவர் தலைமையில் தொழுகை நடந்தது.
இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், "முத்தலாக் முறை முழுமையாக ஒழிக்கப்படும் வரையிலும் பெண்கள் முக்கிய துறைகளில் முன்னேற்றம் காணும்வரையிலும் எனது போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தார். மேலும், தன் மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பற்றி தனக்கு எந்தக் கவலையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக மக்களவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் இந்த மசோதா இன்னும் நிறைவேறவில்லை.
முஸ்லிம் பெண்களுக்கு புத்தாண்டு அன்பளிப்பாக முத்தலாக் சட்டத்தை வழங்கும் வகையில் அச்சட்டத்தை நிறைவேற்ற, அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி நேற்று (ஜன 29) பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.