Published : 24 Jan 2018 12:59 PM
Last Updated : 24 Jan 2018 12:59 PM
இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி மும்பையில் பேரணியில் கலந்து கொண்ட போது, அவர் மீது ஷூ வீசப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் ஓவைசி எம்.பி.க்கு எந்த விதமான காயமும் ஏற்படவில்லை, அதேசமயம், ஷூ வீசிய இளைஞரை போலீஸார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
முத்தலாக் நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவை எதிர்த்து அசாதுதீன் ஒவைசி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
மும்பையின் தெற்குப் பகுதியில் உள்ள நாக்பாடா எனும் பகுதியில் நேற்று இரவு 9.45 மணி அளவில் பேரணியில் பங்கேற்று பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்து திடீரென ஒவைசி மீது ஷூ ஒன்று விழுந்தது. இதனால், சிறிது நேரத்தில் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. அதன்பின் கூட்டத்தை முடித்துக் கொண்டு ஒவைசி அங்கிருந்து புறப்பட்டார்.
இது குறித்து தெற்கு மும்பை போலீஸ் ஆணையர் வீரேந்திரா மிஸ்ரா கூறுகையில், “ இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தோம். ஒவைசி மீது “ஷு” வீசிய அந்த இளைஞரை அடையாளம் கண்டு அவரை சிறிது நேரத்தில் கைது செய்தோம்” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து அசாதுதீன் ஒவைசி நிருபர்களிடம் கூறுகையில், “ ஜனநாயக உரிமைகளுக்காக என் வாழ்க்கையை எங்கும் அர்ப்பணிக்க தயராக இருக்கிறேன். பெரும்பான்மை மக்களும், முஸ்லிம் மக்களும் முத்தலாக் தடைச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால், ஆத்திரமடைந்த சிலர் என் மீது ஷூ வீசியுள்ளனர்.
என் மீது ஷூ வீசியவர்கள். மகாத்மா காந்தி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகியரை கொலை செய்தவர்களின் சித்தாந்தங்களை பின்பற்றி நடப்பவர்கள்தான் .
அவர்களுக்கு எதிரான உண்மையை நான் தொடர்ந்து பேசிவருவதால், என் மீது இப்படி தாக்குதல்கள் நடக்கின்றன. ஆனால், இவை என்னை ஒருபோதும் தடுத்து நிறுத்தாது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT