சந்திரபாபு நாயுடுவுக்கு 2 வழக்குகளில் முன் ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்

சந்திரபாபு நாயடு | கோப்புப்படம்
சந்திரபாபு நாயடு | கோப்புப்படம்
Updated on
1 min read

விஜயவாடா: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு 2 வழக்குகளில் ஆந்திர உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு ஆந்திர முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சந்திரபாபுவை ஆந்திர சிஐடி போலீஸார் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், சந்திரபாபு மீது அமராவதி உள்வட்ட சாலை வழக்கு, ஃபைபர் நெட் வழக்கு, அங்கள்ளு பகுதியில் போலீஸ் விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய வழக்கு என மேலும் 3 வழக்குகளை ஜெகன்மோகன் அரசு பதிவு செய்தது.

இந்த 3 வழக்குகளில் முன் ஜாமீன் கோரி சந்திரபாபு தாக்கல்செய்த மனு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் அங்கள்ளு போலீஸ் வழக்கு, அமராவதி உள்வட்ட சாலை வழக்கு ஆகியவற்றில் சந்திரபாபுவுக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. சந்திரபாபுவை வரும் 16-ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஃபைபர் நெட் வழக்கில் முன் ஜாமீன் குறித்து இன்று தீர்ப்பு வெளியாகிறது.

இதனிடையே அமராவதி உள்வட்ட சாலை வழக்கில் சந்திரபாபுவின் மகனும் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான லோகேஷ் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் லோகேஷிடம் கடந்த 2 நாட்களாக விஜயவாடா சிஐடி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எனினும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in