சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டது ஏன்?: பிஹார் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டது ஏன்?: பிஹார் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
Updated on
1 min read

புதுடெல்லி: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டது ஏன் என பிஹார் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

பிஹார் அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தது. இதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த பாட்னா உயர் நீதிமன்றம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனுமதி வழங்கியது. இதன்படி, சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை பிஹார் அரசு சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில், பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சாதிவாரி கணக்கெடுப்பின் தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. எனவே, இது தொடர்பான கூடுதல் தகவலை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மாநில அரசுகள் முடிவு எடுப்பதை நாங்கள் தடுக்க முடியாது. ஆனால் கணக்கெடுப்பின் தகவல் தொடர்பாக ஏதாவது பிரச்சினை இருந்தால் அதுகுறித்து விசாரிக்கலாம். மேலும் இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது குறித்து நீதிமன்றம் ஆராயும்.

பிஹார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. அதேநேரம், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரத்தை பிஹார் அரசு ஏன் வெளியிட்டது என்பது குறித்து பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கு வரும் ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in