

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சஹாரன்பூரில் ஊரடங்கு உத்தரவு 4 மணி நேரத்திற்கு தளர்த்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை ஊரடங்கு உத்தரவு தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சந்தியா திவாரி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட வேளையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சஹாரன்பூர் மாவட்டத்தில், கடந்த சனிக்கிழமை இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.
உள்துறை அமைச்சர் உறுதி:
உ.பி. சஹரான்பூரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.