Published : 09 Dec 2017 02:45 PM
Last Updated : 09 Dec 2017 02:45 PM

படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு விவகாரம்: காங்கிரஸூக்கு பிரதமர் மோடி கேள்வி

முஸ்லிம் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக கூறிய காங்கிஸால் அதை செயல்படுத்த முடியவில்லை, படேல் சமூகத்தினருக்கு அக்கட்சி எப்படி தனியாக இடஒதுக்கீடு வழங்கும் என, பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு, இன்று (சனிக்கிழமை), இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்படுகிறது.

இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் லுனவாடாவில் இன்று (சனிக்கிழமை) நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

‘‘முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக கூறி காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. அக்கட்சியால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடிந்ததா? ஆனால் ஒரு சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு அளிப்பதாக காங்கிரஸ் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறது. பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை பங்கீட்டு எப்படி இடஒதுக்கீடு வழங்க முடியும்? முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக கூறியது போன்றுதான் இதுவும்.

என்னைப் பற்றி கேவலமான முறையில் காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், இந்த நாட்டிற்காகவும், 125 கோடி மக்களுக்காகவும் எனது வாழ்க்கையை நான் அர்ப்பணித்துள்ளேன்’’ எனக் கூறினார்.

குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்குவதாக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இதை, மறைமுகமாக சாடும் விதத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x