Published : 09 Apr 2014 05:40 PM
Last Updated : 09 Apr 2014 05:40 PM
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான தன்னுடைய உண்மையான முகத்தை மறைப்பதற்காக நரேந்திர மோடி முகமூடி அணிந்து செயல்படுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
கர்நாடக மாநிலம் கோலாரிலும் மைசூரிலும் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களில் சோனியா காந்தி பங்கேற்றார். கோலார் காங்கிரஸ் வேட்பாளரும் மத்திய அமைச்சருமான கே.ஹெச்.முனியப்பாவை ஆதரித்து விஸ்வேஸ்வரய்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கர்நாடகாவைப் போல நாட்டு மக்களுக்கு வளர்ச்சியையும், அமைதியையும், மதசார்பின் மையையும் காங்கிரஸ் அரசால் மட்டுமே தரமுடியும். இந்தத் தேர்தலில் மதவெறி பிடித்தவர் களுக்கும் மதச்சார்பற்றவர் களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டிருக்கிறது. அனைவரும் சகோதரர்களாக சண்டையிடாமல் அமைதியுடன் வாழ வேண்டு மென்றால் மதச்சார்பற்ற காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
பொய்கள் அம்பலமாகும்
நாட்டிலேயே குஜராத் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளதாக பொய் மேல் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டிலே அதிகமாக விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் பறிக்கப்பட்டதும், அதனால் அவர்கள் அதிகமாக தற்கொலை செய்து கொண்டதும் குஜராத்தில்தான் நடந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடந்ததும், ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் அதிகமாக இறந்ததும் குஜராத்தில் தான். சிறுபான்மையின மக்களும், தலித்துகளும், பழங்குடியின மக்களும் அதிகமாக பாதிக்கப் பட்டிருப்பதும் குஜராத்தில்தான். இதனையெல்லாம் ஏன் பா.ஜ.க. விளம்பரம் செய்யவில்லை?
காங்கிரஸின் சிறிய தவறுகளைக் கூட பூதாகரமாக சித்தரிப்பவர்கள், ஏன் குஜராத்தை கண்டுகொள்வதில்லை? ஊழலைப் பற்றி பேசும் பா.ஜ.க. தலைவர்கள், ஊழல் செய்து சிறைக்கு சென்ற எடியூரப்பா, பெல்லாரி சுரங்கங்களை சுரண்டிய ரெட்டி சகோதரர்களின் ஊழலைப் பற்றி பேசாதது ஏன்?
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான தன்னுடைய உண்மை யான முகத்தை மறைக்க, முகமூடி அணிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் மோடி. அவரு டைய உண்மையான முகம் தேர்தலுக்கு பிறகு வெளியே வரும். அவருடைய மதவெறி நாட்டுக்கும், மக்களுக்கும் பேராபத்தை உண்டாக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT