Published : 04 Oct 2023 09:02 AM
Last Updated : 04 Oct 2023 09:02 AM

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இல்லம்.

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று (அக்.4) காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள துணை முதல்வர் சிசோடியாவின் ஜாமீன் மனு இன்று விசாரணை செய்யப்படவுள்ள சூழலில் இந்த சோதனை நடைபெறுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்நிலையில், இன்று காலை முதல் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவருடன் தொடர்புடைய சிலரது வீடுகளிலும் சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக சஞ்சய் சிங் எம்.பி. அலுவலக ஊழியர்கள் சிலரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டது.

ஏற்கெனவே, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் தொடர்பு குறித்து அமலாக்கத் துறை விசாரணை, சோதனைகள் மேற்கொண்டது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை தனது விசாரணை வளையத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இன்றும் கிடைக்காது: இதற்கிடையில் இன்றைய அமலாக்கத் துறை சோதனை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரீனா குப்தா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "சஞ்சய் சிங் தொடர்ந்து பிரதமர் மோடியையும், தொழிலதிபர் அதானியையும் கேள்விக்கு உள்ளாக்கினார். அதன் விளைவுதான் இன்று அவரது வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது. முன்பு நடந்த சோதனைகளில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்றும் எதுவும் கிடைக்காது" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x