கன்னட நடிகர் கார் மோதி பெண் உயிரிழப்பு: வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்

விபத்துக்குள்ளான கார், நடிகர் நாகபூஷனா.
விபத்துக்குள்ளான கார், நடிகர் நாகபூஷனா.
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிரபல கன்னட காமெடி நடிகர் நாகபூஷனா என்று அழைக்கப்படும் நாகபூஷன் எஸ்எஸ் காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, காரை அலட்சியமாக ஓட்டி உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடர்ந்த போலீஸார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கன்னட திரைப்பட நடிகர் நாகபூஷனா. இவர் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவர் செப்டம்பர் 30-ம் தேதியன்று இரவு உத்தரஹள்ளியில் இருந்து கொனனகுண்டே நோக்கி தனது காரில் வேகமாக சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்தகார் வசந்தபுரா மெயின் ரோட்டில் உள்ள மின்சார கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதற்கு முன்னதாக, அந்த சாலையில் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த பிரேமா (48) மற்றும் கிருஷ்ணா (58) தம்பதி மீது நாகபூஷனாவின் கார் வேகமாக மோதியுள்ளது. இதில், பலத்த காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், போகும் வழியிலேயே பிரேமா என்பவர் உயிரிழந்தார். அவரது கணவர் கிருஷ்ணா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அலட்சியமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரிவில் வழக்குப் பதியப்பட்டு நடிகர் நாகபூஷனா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து குமாரசாமி லே அவுட் போக்குவரத்து காவல் எல்லையில் நடந்ததால் காரை பறிமுதல் செய்து அங்குள்ள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறந்த நடிகர் விருது: கன்னட திரையுலகில் 15- க்கும்மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகர் நாகபூஷனா (37) . சங்கஷ்ட கர கணபதிஎனும் திரைப்படத்தின் மூலமாக 2018-ம் ஆண்டு இவர் திரையுலகில் அறிமுகமானார்.

இக்கத், படவா ராஸ்கல் மற்றும் ஹனிமூன் ஆகிய திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தார். இக்கத் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை நாகபூஷனா வாங்கி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in