Published : 24 Dec 2017 08:34 AM
Last Updated : 24 Dec 2017 08:34 AM
சீனாவுடன் டோக்லாம் பிரச்சினை ஏற்பட்ட பிறகு, சிக்கிம், பூடான் எல்லையில் கூடுதல் எல்லைச் சாவடிகள் அமைக்கப்பட்டு படை பலம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவப் படைகளில் ஒன்றான ‘சஷாஸ்திரா சீமா பல்’ (எஸ்எஸ்பி) 54-வது உதய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசும்போது, “நேபாளம் மற்றும் பூடான் உடனான நமது எல்லையை மட்டும் எஸ்எஸ்பி பாதுகாக்கவில்லை. இவ்விரு அண்டை நாடுகளின் நட்புறவும் கெடாமல் பாதுகாக்கிறது. கடந்த ஆண்டு இந்தப் படைக்கு ஆற்றல் வாய்ந்த ஆண்டாக அமைந்தது. சீனாவுடன் டோக்லாம் பிரச்சினை ஏற்பட்ட பிறகு, சிக்கிம் மற்றும் பூடான் எல்லையில் கூடுதல் எல்லைச் சாவடிகள் அமைக்கப்பட்டு எஸ்எஸ்பி.யின் பலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஊடுருவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் எஸ்எஸ்பி.யின் செயல்பாடு பாராட்டத்தக்கது. எல்லைக்கு அருகில் வசிக்கும் மக்களை நம் நாட்டின் முக்கிய சொத்தாக கருதவேண்டும். பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து இவர்களின் நலனில் எஸ்எஸ்பி அக்கறை செலுத்துவது பாராட்டுக்குரியது. அண்டை நாடுகளுடன் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இவற்றை தொடர்வது மிகவும் அவசியம்” என்றார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT