Published : 16 Dec 2017 09:37 AM
Last Updated : 16 Dec 2017 09:37 AM
குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகளை வாக்காளர் ஒப்புகை சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் என்று கோரிய காங்கிரஸின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குஜராத் சட்டப்பேரவைக்கு கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடந்தது. நேற்று முன்தினம் 2-வது மற்றும் இறுதிகட்ட வாக்குப் பதிவு முடிந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய வாக்கு கணிப்புகளில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக பல செய்தி சேனல்கள் தகவல் வெளியிட்டன.
குஜராத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்கும்போது அதனுடன் இணைந்த வாக்காளர் சரிபார்ப்பு ஒப்புகை சீட்டு இயந்திரம் (விவிபாட்) மூலம் வாக்காளருக்கு, தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் வசதி செய்யப்பட்டது.
இதன் மூலம் வாக்காளர் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால், இதிலும் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் பதிவான வாக்குகளையும் விவிபாட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகளையும் சரிபார்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் உள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், குறைந்தது 25 சதவீத அளவுக்கு விவிபாட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகளையும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் சரிபார்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது. இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT