கனடா விவகாரம் | அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமருடன் ஆலோசனை

கனடா விவகாரம் | அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமருடன் ஆலோசனை
Updated on
1 min read

புதுடெல்லி: காலிஸ்தான் தனிநாடு கோரும் பஞ்சாபின் பிரிவினை ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜார், கடந்த 1997-ம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கனடாவில் இருந்தே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் நிஜார் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி கனடாவின் சர்ரே நகரின் குருத்துவரா அருகில் அடையாளம் தெரியாத 2 பேரால் நிஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டு 3 மாதங்களுக்குப் பிறகு, அவரது கொலையில் இந்தியாவுக்கு பங்கு இருப்பதாக நாடாளுமன்றத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீரென குற்றம் சாட்டினார். மேலும், இந்திய தூதரக அதிகாரி பவன்குமார் ராய் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டார். அதற்கு பதிலடியாக டெல்லியில் உள்ள கனடா அதிகாரி ஆலிவர் சில்வர்ஸ்டரை 5 நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா - கனடா இடையே தூதரக ரீதியாக சிக்கல் எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது கனடாவில் இருந்து இந்திய தூதரை வெளியேற்ற உத்தரவிட்டது, காலிஸ்தான் பிரச்சினை, திடீரென இந்தியா மீது கனடா பிரதமர் ட்ரூடோ குற்றம் சாட்டுவதற்கான சர்வதேச பின்னணி போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்துரைத்துள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் மோடியை சந்தித்து அமைச்சர் ஜெய்சங்கர் விரிவாக ஆலோசனை நடத்தியதாக டெல்லி வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in