Published : 08 Dec 2017 09:50 AM
Last Updated : 08 Dec 2017 09:50 AM

கும்பமேளாவுக்கு ‘யுனெஸ்கோ’ அங்கீகாரம்

இந்தியாவில் நடக்கும் கும்பமேளாவை கலாச்சார பாரம்பரியமாக யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ளது.

இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் ஆகிய 4 நகரங்களில் நடக்கும் கும்பமேளாவில் உலகெங்கிலும் இருந்து வரும் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்று புனித நீராடுகின்றனர். இந்த கும்பமேளா ஜனவரி 14-ம் தேதி மகர சங்கராந்தி அன்று தொடங்கி, தொடர்ந்து 50 நாட்களுக்கு மேல் நடைபெறுவது வழக்கம். உலகிலேயே அதிக மக்கள் கூடும் ஒரு சில நிகழ்ச்சிகளில் கும்பமேளாவும் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்நிலையில், ‘இந்த மனித குலத்தின் கலாச்சார பாரம்பரியம் கும்பமேளா’ என்று யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் யுனெஸ்கோ நேற்று வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறும்போது, “புனிதமான கும்பமேளாவை யுனெஸ்கோ அங்கீகரித்திருப்பது குறித்து நாம் மிகவும் பெருமைப்படும் நேரம் இது. இந்த உலகில் அமைதியான முறையில் மிகப் பெரிய அளவில் மக்கள் கூடும் நிகழ்ச்சியாக கும்பமேளா உள்ளது” என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படும் யுனெஸ்கோ, கல்வி, அறிவியல், பண்பாடு போன்ற அம்சங்களை உலகம் முழுவதும் பாதுகாத்தும் ஊக்குவித்தும் வருவது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x