Published : 19 Dec 2017 09:00 AM
Last Updated : 19 Dec 2017 09:00 AM
இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று அந்த மாநில முதல்வர் வீரபத்ர சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 9-ம் தேதி இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த மாநில தேர்தல் வரலாற்றில் மிக அதிகபட்சமாக 74 சதவீத வாக்குகள் பதிவாகின.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 36 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இந்த முறை பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதுகுறித்து அந்த மாநில முதல்வர் வீரபத்ர சிங் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பாஜகவின் வெற்றியை ஏற்றுக் கொள்கிறேன். மாநில முதல்வர் என்ற வகையில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். எனது மகன் விக்ரமாதித்ய சிங் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். வருங்கால தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற வாழ்த்து கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.
தந்தை, மகன் வெற்றி
இமாச்சல பிரதேசத்தின் ஆர்கி தொகுதியில் முதல்வர் வீரபத்ர சிங் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் ரத்தன் சிங் பால் களத்தில் இருந்தார்.
இதில் வீரபத்ர சிங் 34,499 வாக்குகள் பெற்றார். ரத்தன்பால் சிங்கிற்கு 28,448 வாக்குகள் கிடைத்தன. 6,051 வாக்குகள் வித்தியாசத்தில் வீரபத்ர சிங் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது 85 வயதாகும் வீரபத்ர சிங் அரசியலில் இருந்து நிரந்தரமாக ஓய்வுபெற விரும்புவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரது மகன் விக்ரமாதித்ய சிங் (28), சிம்லா புறநகர் தொகுதியில் போட்டியிட்டார். பாஜக வேட்பாளர் டாக்டர் பிரமோத் சர்மாவை தோற்கடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT