பெங்களூருவில் தமிழக அரசு பேருந்து மீது கல்வீச்சு: போலீஸார் தீவிர‌ விசாரணை

கல்வீசி தாக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் பேருந்து
கல்வீசி தாக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் பேருந்து
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூருவில் நள்ளிரவில் தமிழக அரசு போக்குவரத்து கழகப் பேருந்தின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகப் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு சேலத்தில் இருந்து பெங்களூரு சேட்டிலைட் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த‌து. நள்ளிரவு 2.45 மணியளவில் கே.ஆர்.மார்க்கெட் அருகே சென்ற போது மர்ம நபர்கள் சிலர் பேருந்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தின் பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இருவருக்கு லேசான கீறல் ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

இதுகுறித்து பேருந்தின் ஓட்டுநர் குணசேகரன் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி ஓட்டுநர் குணசேகரன் இந்த கல்வீச்சு தாக்குதல் குறித்து சாம்ராஜ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவிரி நீர் விவகாரத்தின் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? கர்நாடக அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண சேவை வழங்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? மர்ம நபர்கள் வேறு ஏதாவது உள்நோக்கத்தோடு இதனை செய்துள்ளார்களா? என போலீஸார் பல கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in