Published : 08 Sep 2023 05:03 AM
Last Updated : 08 Sep 2023 05:03 AM

பாரத் – இந்தியா சர்ச்சையில் விலகியிருங்கள்: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

புதுடெல்லி: பாரத் – இந்தியா அரசியல் சர்ச்சையில் இருந்து விலகியிருக்குமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு 9, 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் தலைவர்களுக்கு இரவு விருந்துக்கான அழைப்பிதழ் குடியரசுத் தலைவர் சார்பில் கடந்த திங்கட்கிழமை அனுப்பப்பட்டது. இந்த அழைப்பிதழில் ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்று இருப்பதற்கு பதிலாக ‘பாரத் குடியரசுத் தலைவர்’ என்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

வரும் 18-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இது நாட்டை பெருமைப்படுத்தும் நடவடிக்கை என்று பாஜக தலைவர்கள் பதில் அளித்தனர். இரு தரப்பிலும் மாறி மாறி தெரிவிக்கும் கருத்துகளால் இந்த விவகாரம் மிகப்பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் ஜி20 மநாடு மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாரத் – இந்தியா சர்ச்சையில் இருந்து விலகியிருக்குமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் கருத்து எதுவும் கூற வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பெயர் மாற்றம் தொடர்பான வாதப் பிரதிவாதம் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தை முதல்முறையாக பிரதமர் தனது அமைச்சர்களுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் வரும் 18-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் என்ன என்று எதிர்க்கட்சிகள் கேள்விஎழுப்பியிருந்தன. இதற்கு நாடாளுமன்ற விவாகரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அளித்த பதிலில், “நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்த பிறகு, கூட்டம் தொடங்குவதற்கு முன்னால் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெறும். இதில் நாடாளுமன்ற பணிகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்” என்றார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட 9 பிரச்சினைகளை எழுப்பவிருப்பதாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று முன்தினம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா இடம்பெறாதது குறித்து பிஆர்எஸ் எம்எல்சி கே.கவிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அரசியல் சலசலப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற சிறப்பு அமர்வு வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x