Published : 26 Dec 2017 10:31 AM
Last Updated : 26 Dec 2017 10:31 AM

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் புது வியூகம்

வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க, அமைப்பு சாரா தொழிலாளர்களை அணி திரட்டுவதற்கு காங்கிரஸ் புதிய வியூகம் அமைத்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பின், நடந்த அடுத்தடுத்த சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. எனினும் சமீபகாலமாக காங்கிரஸ் புதிய உத்வேகத்துடன் செயலாற்றி வருகிறது. வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதன் ஒருபகுதியாக, சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுள்ளார்.

சமீபத்தில் நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ், பாஜகவுக்கு கடுமையான சவாலாக விளங்கியது. அம்மாநிலத்தில் ஆளும் பாஜக, போராடிதான் வெற்றியை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தயாரிப்பில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் ஏழை மற்றும் கீழ்நடுத்தர வர்க்கத்தினர் இடையே, காங்கிரஸ் சில ஆண்டுகளாகவே ஆதரவை இழந்து வரும் நிலையில் அதை மீட்டெடுக்க புதிய வியூகத்தை அக்கட்சி வகுத்துள்ளது. நகர்ப்புற ஏழை மக்களின் வாக்குகளை இழந்ததால்தான், சில ஆண்டுகளுக்கு முன், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று, காங்கிரஸ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

எனவே நாடு முழுவதும் அமைப்பு சாரா தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதற்காக காங்கிரஸில் புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் டெல்லி மாநில ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மூத்த காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் அகில இந்திய தலைவர் அர்பிந்த் சிங் கூறியதாவது:

''ஏழை - எளிய மக்கள், நடுத்தர வகுப்பினர் நீண்டகாலமாக காங்கிரஸின் ஆதரவுத் தளமாக இருந்து வந்தனர். அவர்கள் ஆதரவு வெகுவாக குறைந்ததால்தான் காங்கிரஸுக்கு தோல்வி ஏற்பட்டது. எனவே இந்த ஆதரவு தளத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

குறிப்பாக இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களை காங்கிரஸ் பக்கம்  ஈர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அமைப்பு சாரா தொழிலாளர்களில், குறிப்பாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், கட்டுமான தொழிலாளர்களின் நலனுக்காக 40,000 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

ஆனால், தற்பாதைய பாஜக அரசு இதை பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருக்கிறது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதை பயன்படுத்தி கட்டுமான தொழிலாளர்களின் நலனுக்கு பெரிய அளவில் திட்டங்களை செயல்படுத்துவோம்'' என அர்பிந்த் சிங் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x