"ஜூனியர் என்பதால் உதயநிதிக்கு இது தெரியவில்லை" - சனாதன சர்ச்சை குறித்து மம்தா பானர்ஜி கருத்து

"ஜூனியர் என்பதால் உதயநிதிக்கு இது தெரியவில்லை" - சனாதன சர்ச்சை குறித்து மம்தா பானர்ஜி கருத்து
Updated on
1 min read

கொல்கத்தா: உதயநிதி ஜூனியர் என்பதால் அவருக்கு இது குறித்து தெரியவில்லை என நினைக்கிறன் என்று சனாதன சர்ச்சை குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "உதயநிதி ஸ்டாலினின் கருத்துகளைப் பொறுத்தவரையில், அவர் ஒரு ஜூனியர். அவர் எதற்காக, எந்த அடிப்படையில் கருத்து வெளியிட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒவ்வொரு மதமும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களை நான் மதிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனி உணர்வுகள் இருப்பதால் அனைவரையும் மதிக்க வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோள்.

இந்தியா ஒரு மதசார்பற்ற, ஜனநாயக நாடு. அதன் கொள்கை வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்.

சனாதன தர்மத்தை வேதங்களில் இருந்து கற்றுக்கொள்கிறோம். புரோகிதர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறோம். நாடு முழுவதும் பல கோவில்கள் உள்ளன. எல்லாரும் கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்குச் செல்கிறோம். எனவே எந்த ஒரு பிரிவு மக்களின் உணர்வுகளையும் பாதிக்கும் செயல்களில் நாம் ஈடுபட கூடாது.

உதயநிதி ஜூனியர் என்பதால் அவருக்கு இது குறித்து தெரியவில்லை என நினைக்கிறன். அவரை கண்டிப்பதை விட மக்களின் உணவுகளை பாதிக்கும் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கக்கூடாது என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in