Published : 19 Dec 2017 08:58 AM
Last Updated : 19 Dec 2017 08:58 AM

இமாச்சல் புதிய முதல்வர் யார்?

இமாச்சல பிரதேச புதிய முதல்வராக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பதவியேற்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இமாச்சல் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற போதிலும் அதன் முதல்வர் வேட்பாளரான பிரேம் குமார் துமல் தோல்வியைத் தழுவியுள்ளார். இதைத் தொடர்ந்து மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா இமாச்சலைச் சேர்ந்தவர். அந்த மாநில அரசியல், ஆட்சி நிர்வாகத்தை நன்கு அறிந்தவர். எனவே அவர் முதல்வராக பதவியேற்கக் கூடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் பிரேம் குமார் துமலின் மகனும் மக்களவை எம்.பி.யுமான அனுராக் தாக்கோரும் (43) முதல்வர் பதவியை ஏற்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இவர் இமாச்சலின் ஹரிம்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த மாநில பாஜக இளைஞர் அணித் தலைவராகவும் உள்ளார்.

இதேபோல காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த அந்த மாநில முன்னாள் அமைச்சர் அனில் சர்மாவின் பெயரும் முதல்வர் பதவிக்கான பரிசீலனையில் உள்ளது. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் சுக் ராம் சர்மாவின் மகன் ஆவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x