Published : 29 Dec 2017 02:31 PM
Last Updated : 29 Dec 2017 02:31 PM
காபூலில் நடத்தப்பட்டது கோழ்ழைத்தனமான தீவிரவாதத் தாக்குதல் என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த வெளியுறவு அமைச்சகம் தரப்பில், ''காபூலில் நடத்தப்பட்டது கோழைத்தனமான தாக்குதல். 40 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன. அவர்களின் குடும்பத்துக்கு எங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆப்கானில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஏற்பட அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 பேரை பலிவாங்கிய தாக்குதல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷியா பிரிவினருக்கான தபயான் கலாச்சார மையம் உள்ளது. அங்குள்ள கருத்தரங்க அறையில், ஆப்கானிஸ்தானில் ரஷ்ய படைகள் ஊடுருவியதன் 38-வது ஆண்டை முன்னிட்டு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 100 பேர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதையடுத்து அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
இதனிடையே மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 40 பேர் பலியாயினர். மேலும் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் 2 முறை குண்டு வெடித்தது. எனினும் இதனால் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நபர்களில் ஒருவராக ஊடுருவிய தற்கொலைப்படை தீவிரவாதி இந்த தாக்குதலை நடத்தி இருக்கக் கூடும் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT