Published : 27 Dec 2017 10:00 AM
Last Updated : 27 Dec 2017 10:00 AM

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் டாக்டர்கள் மாவோயிஸ்ட் அமைப்பில் சேரட்டும்: மத்திய இணையமைச்சர் பேச்சால் சர்ச்சை

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத டாக்டர்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேரட்டும், அவர்களை சுட்டுத் தள்ளிவிடுகிறோம் என மத்திய இணையமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மக்களவை தொகுதி எம்.பி. ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர். மத்திய உள் துறை இணையமைச்சரான இவர் சந்திரபூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேர மருந்து கடையை நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த இந்நிகழ்ச்சியில் அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த மருத்துவர்களான உதய் நவாதே (மாவட்ட அறுவை சிகிச்சை மருத்துவர்) மற்றும் எஸ்எஸ் மோரி (மருத்துவக் கல்லூரி முதல்வர்) பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. அவர்கள் விடுப்பில் சென்றதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் கூறும்போது, “நகர மேயர், துணை மேயர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். ஆனால் இந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் ஏன் வரவில்லை. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் விடுப்பில் செல்வது சரியான செயலா?

மாவோயிஸ்ட்களுக்குதான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்காது. இவர்களுக்கும் (மருத்துவர்கள்) ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேரட்டும், அவர்களை சுட்டுத் தள்ளிவிடுகிறோம்” என்றார்.

சர்ச்சைக்குரிய இவரது இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x