Published : 05 Dec 2017 09:01 AM
Last Updated : 05 Dec 2017 09:01 AM
மகாராஷ்டிரா, குஜராத் எல்லைப் பகுதிகளில் ஒக்கி புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித் துள்ளது.
தமிழகத்தின் தென்மாவட்டங்கள், கேரளா, லட்சத்தீவுகளைச் சூறையாடிய ஒக்கி புயல் நேற்று அரபிக் கடலில் மும்பையில் இருந்து 690 கி.மீ. தொலைவிலும் குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 870 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமேஷ்நேற்று கூறியதாவது:
ஒக்கி புயல் படிப்படியாக வலு குறைந்து தெற்கு குஜராத், வடக்கு மகாராஷ்டிரா பகுதியை இன்று இரவு கரையைக் கடக்கும். இதையொட்டி குஜராத், மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத்தில் பலத்த மழை பெய்யும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குஜராத் மாநில வருவாய் துறை முதன்மை செயலாளர் பங்கஜ் குமார் கூறியபோது, புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யு மாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார். இதேபோல மகாராஷ்டிர அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் புயலால் பாதிக்கப்பட்ட கேரளா வின் கடற்கரை பகுதிகளை நேற்று பார்வையிட்டார். அவர் கூறியபோது, காணாமல் போன 100 மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறும். மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை தேடுதல் பணி தொடரும் என்று தெரிவித்தார்.
ஒக்கி புயல் பாதிப்பு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் நேற்று அவர் சந்தித்துப் பேசினார். அப்போது நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
மத்திய கேபினட் செயலாளர் பி.கே. சின்ஹா கூறியபோது, ஒக்கி புயல் பாதிப்புகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. இதுவரை 600 மீனவர்களை மீட்டுள்ளோம்என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் விளக்கம்
ஒக்கி புயல் குறித்து தமிழக, கேரள மீனவர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியபோது, “கேரளா, தென் தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று நவம்பர் 28-ம் தேதி இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்தது. 29-ம் தேதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த சுற்றறிக்கை மாநில செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT