Published : 23 Dec 2017 09:34 AM
Last Updated : 23 Dec 2017 09:34 AM

ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் வழக்கு: அசோக் சவானிடம் விசாரணை நடத்த ஆளுநர் அனுமதிக்கு உயர் நீதிமன்றம் தடை

ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் தொடர்பான ஊழலில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவானுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த ஆளுநர் வழங்கிய அனுமதிக்கு மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

கார்கில் போரில் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மாநில அரசு சார்பில் வீடுகள் கட்டித்தரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. 31 அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்காக ‘ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம்’ அமைக்கப்பட்டது. இதில் பல முறைகேடு கள் நடந்தது 2010-ம் ஆண்டில் தெரியவந்தது.

இதில் மகாராஷ்டிரா முதல்வராக இருந்த அசோக் சவான், 2 பிளாட்டுகளை தனது உறவினருக்காக பெற்றுக் கொண்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது. மேலும் இந்த முறைகேட்டில் அதிகாரிகள், அரசியல்வாதிகள், முன் னாள் மற்றும் பணியில் உள்ள ராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அசோக் சவான் ராஜினாமா செய்தார்.

அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த 2013-ல் அப்போதைய ஆளுநர் சங்கரநாராயணன் அனுமதி அளிக்கவில்லை. பின்னர், மகாராஷ்டிரா ஆளுநர் பதவிக்கு வந்த வித்யாசாகர் ராவிடம் சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று கடந்த 2016 பிப்ரவரி மாதத்தில் அசோக் சவானுக்கு எதிராக வழக்கு தொடர வித்யாசாகர் ராவ் அனுமதி வழங்கினார். இதை எதிர்த்து அசோக் சவான் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சித் மோரே, சாதனா ஜாதவ் ஆகியோர் கொண்ட அமர்வு, ஆளுநர் அளித்த அனுமதிக்கு நேற்று தடை விதித்தனர். ‘‘சிபிஐயின் கோரிக்கையை ஏற்கவோ மறுக்கவோ முந்தைய ஆளுநரின் முடிவை மறுபரிசீலனை செய்யவோ ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. என்றாலும் சவானுக்கு எதிராக புதிய ஆதாரங்கள் இருப்பதாகக் கூறிய சிபிஐ அப்படி எதையும் தாக்கல் செய்யவில்லை என்பதால் ஆளுநர் அனுமதி அளித்ததை ரத்து செய்கிறோம்’’ என்று நீதி பதிகள் உத்தரவில் தெரிவித்த னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x