Published : 29 Dec 2017 12:00 PM
Last Updated : 29 Dec 2017 12:00 PM

31-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் எந்திரன் மக்கள் பணியில் ரோபோ போலீஸ்- துபாய்க்கு அடுத்து தெலங்கானா சாதனை

ஹைதராபாத்

தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் வரும் 31ம் தேதி முதல் மக்கள் பணியில் ரோபோ போலீஸ் ஈடுபடுத்தப்பட உள்ளது. உலகிலேயே துபாய்க்கு அடுத்தபடியாக இந்த சாதனையை தெலங்கானா சாதித்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் வெளிவந்தது. இதில் சிட்டி கதாபாத்திரம் ஒரு ரோபாவாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த ரோபோ, நல்ல விஷயங்களுக்காக உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் இதன் மூலம் சில தீயவைகளும் நடக்கலாம் என்பதையும் எந்திரன் படத்தில் காட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது ரோபோ 2ம் பாகம் 2.0 வாக விரைவில் திரையிடப்பட உள்ள நிலையில், இதற்கு முன்பாகவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ’ரோபோ போலீஸ்’ ஹைதராபாத்தில் வரும் 31ம் தேதி முதல் மக்கள் பணியில் ஈடுபட உள்ளது.

ரூ. 50 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எச்-போட் ரோபாடிக் ரக போலீஸ் ரோபோ மிகவும் திறமை வாய்ந்த ரோபாவாக இந்தியாவிலேயே ஹைதராபாத்தில் உருவாக்கப்பட்டுள்ளதென இதனை உருவாக்கிய ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இந்த ரோபோ, வரும் 31ம் தேதி முதல், ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியின் சோதனைச் சாவடியில் தனது பணியைத் தொடங்க உள்ளது. இந்த ரோபோ, புகார்களை பெற்றுக்கொள்ளும், தன்னிடம் பேசுபவர்களை ஸ்கேன் செய்து நினைவில் வைத்துக்கொள்ளும். தன்னிடம் பேசுபவர்களுக்கு பதிலளிக்கும். மேலும், வெடிகுண்டைக் கண்டறிந்து அதனை நீக்கும் வல்லமையும் படைத்தது.

இதற்கு முன், துபாயில் உலகிலேயே முதன் முறையாக ரோபோ போலீஸ், பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இது, பிரான்ஸில் தயாரிக்கப்பட்டதாகும். இந்த ரோபோ ஸ்கேட்டிங் போல் காலில் சக்கரங்கள் அமைக்கப்பட்டது. இதனால் நடக்க இயலாது. ஆனால், ஹைதராபாத் ரோபோ, மனிதர்களை போல் நடக்கும் தன்மை கொண்டதாகும் என்பது குறிப்பிட தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x