Published : 11 Dec 2017 10:34 AM
Last Updated : 11 Dec 2017 10:34 AM

காங்கிரஸின் அகமது படேலை முதல்வராக்க குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு- பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலை குஜராத் முதல்வராக்க பாகிஸ்தான் விரும்புகிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.

குஜராத்தில் 2-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பாலன்பூரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வீட்டில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர், இந்தியாவின் முன்னாள் குடியரசு துணைத் தலைவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தக் கூட்டம் நடைபெற்ற அடுத்த நாளே, ‘மோடி இழிவான மனிதர்’ என மணிசங்கர் அய்யர் கூறினார். இதன்மூலம் அவர் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள், ஏழைகள் உட்பட குஜராத் மக்களை அவமதித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேலை குஜராத் முதல்வராக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ முன்னாள் இயக்குநர் ஜெனரல் சர்தார் அர்ஷத் ரபிக் கூறியுள்ளார். இதன்மூலம் குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைமை விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மோடி பேசும்போது, “நான் பிரதமரான பிறகு மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் சென்றார். அங்கு சிலரைச் சந்தித்து, மோடியை நீக்க வேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளார்’’ என்று குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x