Published : 13 Dec 2017 10:17 AM
Last Updated : 13 Dec 2017 10:17 AM

2-ம் கட்ட சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: பாஜகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் - குஜராத் மக்களுக்கு மோடி ட்விட்டரில் வேண்டுகோள்

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைக்கான முதல் கட்டத் தேர்தல் (89 தொகுதிகளுக்கு) கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 2-ம் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று பிரதமர் மோடி குஜராத் மக்களுக்கு ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறும்போது, “மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு குஜராத்தை வலிமைமிக்க மாநிலமாக மாற்றுவோம். ஒன்றுடன் ஒன்றைக் கூட்டினால் இரண்டு என்று சொல்லாமல் அதை 11-ஆக மாற்றுவோம். மாநிலத்தை புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்வோம்.

இந்தத் தேர்தலுக்காக மூலை முடுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்துள்ளேன். சென்ற இடமெல்லாம் மக்கள் என் மீது அன்பைப் பொழிந்தனர். என்னுடைய 40 ஆண்டு பொது வாழ்க்கையில் இதுபோன்ற நெகிழ்ச்சியான சம்பவங்களை நான் பார்த்ததில்லை. மக்கள் காட்டிய அன்பால் நான் மேலும் வலிமை பெற்றுள்ளேன். இதன்மூலம் நாட்டின் வளர்ச்சிக்காக எனது நேரம் முழுவதையும் அர்ப்பணிக்கவுள்ளேன்.

குஜராத்தின் வளர்ச்சி குறித்தும், என்னுடைய செயல்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதற்கு குஜராத் மக்கள் தக்க பதிலடி கொடுப்பர்.

இந்தத் தேர்தலில் அனைவரும் திரளாக வந்து வாக்களிக்க வேண்டும். குறிப்பாக பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x