“பாஜகவுக்கும் அரசுக்கும் அவமானம்...” - WFI சஸ்பெண்ட் குறித்து மவுஹா மொய்த்ரா விமர்சனம்

மஹூவா மொய்த்ரா | கோப்புப்படம்
மஹூவா மொய்த்ரா | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பை, உலக மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்துள்ளது குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மஹூவா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளிட்டுள்ள பதிவில், "உரிய நேரத்தில் தேர்தலை நடத்தாததால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த கூட்டமைப்பு இடைநீக்கம் செய்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் நமது தேசிய கொடியின் கீழ் விளையாட முடியாது. ஒரு பாலியல் வேட்டையாளர் எம்.பி. விளையாட்டை தனது காலுக்கு கீழே போட்டு மிதிக்க அனுமதித்ததுக்காக பாஜகவுக்கும், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்கும் அவமானம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்த தவறிய காரணத்துக்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பை, உலக மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்திருந்தது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் குழுவுக்கான தேர்தலை கடந்த ஜூன் மாதம் நடத்தி இருக்க வேண்டும். ஆனால், மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் தேர்தல் நடத்துவது தள்ளிப்போனது.

இந்தத் தேர்தல் மூலம் தலைவர் உட்பட 15 நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். தேர்தல் கடந்த 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. இதில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் தரப்பு ஆதரவாளர்கள் முக்கியப் பொறுப்புகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். கடந்த மே மாதம் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடைபெற்ற போது குறிப்பிட்ட கால கெடுவுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உலக மல்யுத்த கூட்டமைப்பு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in