Published : 15 Dec 2017 04:58 PM
Last Updated : 15 Dec 2017 04:58 PM

முத்தலாக் வரைவுச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு

முத்தலாக் நடைமுறைக்கு முடிவுகட்டுவதற்காக கொண்டுவரவுள்ள, புதிய சட்டத்திற்கான வரைவு மசோதாவிற்கு மத்திய அரசு இன்று (வெள்ளிக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.

முஸ்லிம்கள் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்டம் அங்கீகாரமற்றது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. முத்தலாக் முறை தொடர்பாக மத்திய அரசு 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்றவேண்டும் எனவும் அறிவுறுத்தியது. இந்நிலையில் உடனடி முத்தலாக் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அதற்கான வரைவு மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதற்காக, முஸ்லிம் பெண்கள் திருமணப் பாதுகாப்பு மற்றும் உரிமை மசோதாவை தயாரிப்பதற்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழு தயாரித்துள்ள வரைவு மசோதாவில் "சட்டத்துக்குப் புறம்பான முறையில் மூன்றுமுறை தொடர்ந்து தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும். அவர்கள் வாய்மொழி, கடிதம், இமெயில், கைப்பேசியின் குறுந்தகவல் உட்பட எந்த வகையிலும் முத்தலாக் அளிக்க முடியாது. இத்துடன், விவாகரத்து பெறும் பெண்களுக்கு முறையான ஜீவனாம்சம் அளிக்கவும், அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ப்பிற்கு பொறுப்பேற்கவும் வசதி செய்யப்பட வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வரைவு மசோதாவிற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்ட முன்வடிவு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x