Published : 21 Jul 2014 10:35 AM
Last Updated : 21 Jul 2014 10:35 AM

பெங்களூர் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கைது

பெங்களூரில் 6 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டது தொடர்பான வழக்கில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரில் உள்ள விப்ஜியார் பள்ளியில் கடந்த ஜூலை 2-ம் தேதி 6 வயது பள்ளி மாணவியை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் ஜூலை 15-ம் தேதி வெளியில் தெரிந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 4 நாள்களாக அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை சுதந்திரப் பூங்காவில் திரண்ட விப்ஜியார் பள்ளியின் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், போலீஸாரை கண்டித்து கோஷமிட்டனர். பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூர் போலீஸ் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கர் செய்தியாளர் களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறும்போது,

“பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் முஸ்தபா என்பவரை கைது செய்துள்ளோம். மேலும் ஒருவரை தேடி வருகிறோம்” என்றார்.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக பள்ளியில் பணிபுரிந்த 3 பேரை தடுப்புக் காவலில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு, ஐ.எஸ்.சி.இ. கல்வி வாரியத்தின் கவுன்சிலுக்கு கர்நாடக மாநில அரசு கடிதம் எழுதியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x