Published : 28 Dec 2017 01:00 PM
Last Updated : 28 Dec 2017 01:00 PM

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் முத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்

முஸ்லிம் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்பையும் மீறி முத்தலாக் சட்ட முன்வடிவை மக்களவையில் இன்று (வியாழன்) சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

முஸ்லிம்கள் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ல் தீர்ப்பு வழங்கியது. மேலும் முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் எனவும் பரிந்துரைத்தது.

இதையடுத்து அதற்கான சட்டம் கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் புதிய சட்ட முன்வடிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், "சட்டத்துக்கு புறம்பான முறையில் மூன்றுமுறை தொடர்ந்து தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும். இதை அவர்கள் வாய்மொழி, கடிதம், இமெயில், கைப்பேசியின் குறுந்தகவல் உட்பட எந்த வகையிலும் அளிக்க முடியாது. இதை மீறி, முத்தலாக் கூறும் முஸ்லிம் ஆண்கள் மீது அளித்து அவர்கள் கைது செய்யப்பட்டால் ஜாமீன் தரப்பட மாட்டாது. இத்துடன், விவாகரத்து பெறும் பெண்களுக்கு முறையான ஜீவனாம்சம் அளிக்கவும், அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ப்பிற்கு பொறுப்பேற்கவும் வசதி செய்யப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் முத்தலாக் சட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுபோலவே, முஸ்லிம் அமைப்பகளும், எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எனினும் இந்த சட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் இந்த சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.

இந்த சட்டம் அவசர கதியில் கொண்டுவரப்படுவதாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்கப்படாமல் உருவாக்கப்பட்டள்ள இந்த சட்ட முன்வடிவை, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு முதலில் அனுப்ப வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்த சட்ட முன்வடிவுக்கு அதிமுக சார்பில் எம்.பி அன்வர் ராஜா எதிர்ப்பு தெரிவித்தார். முத்தலாக் சட்டவிரோதமாக அறிவிக்கும் இந்த சட்டம், அவசர கதியில் கொண்டு வரப்படுவதை ஏற்க முடியாது என அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x