ராஜஸ்தானின் கோட்டா நகரில் ஐஐடி-ஜேஇஇ பயிற்சி மாணவர் தற்கொலை: ஆகஸ்டில் 4-வது அதிர்ச்சி

ராஜஸ்தானின் கோட்டா நகரில் ஐஐடி-ஜேஇஇ பயிற்சி மாணவர் தற்கொலை: ஆகஸ்டில் 4-வது அதிர்ச்சி
Updated on
1 min read

கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஐஐடி - ஜேஇஇ நுழைவுத் தேர்வு, நீட் நுழைவுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வந்து தனியார் கோச்சிங் மையங்களில் தங்கிப் படிப்பதுண்டு. இந்நிலையில், நேற்றிரவு ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டுவந்த 18 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது இந்த ஆகஸ்ட் தொடங்கியதிலிருந்து 4-வது தற்கொலை சம்பவமாகும். 2023 தொடங்கியதிலிருந்து இதுபோல் பயிற்சி மாணவர்கள் 21 பேர் தற்கொலையால் இறந்துள்ளனர்.

நேற்று சடலமாக மீட்கப்பட்ட மாணவர் பிஹார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். இவர் கோட்டா மஹாவீர் நகரில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஐஐடி நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி பெற்றுவந்தார். இந்நிலையில், அவர் திங்கள்கிழமைக்குப் பின்னர் பயிற்சி மையத்துக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது அவர் சடலமாகக் கிடந்தார். சடலத்தை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அறையில் தற்கொலைக் குறிப்பு ஏதுமில்லை. சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோட்டா மாவட்ட நிர்வாகத்தில் பெறப்பட்ட புள்ளிவிவரங்களின்படி கோட்டாவில் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து சராசரியாக மாதத்துக்கு 3 தற்கொலைகள் என்ற வீதத்தில் நடைபெறுகிறது எனத் தெரியவந்துள்ளது.

மனநல ஆலோசனை: மாணவர்கள் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்துவரும் சூழலில் கோட்டா மாவட்ட ஆட்சியர் ஓபி புங்கார் கூறுகையில், மாணவர்களின் மனநலனைக் கண்காணிக்கும் வகையில் கோட்டாவில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மனநல சோதனை தேர்வுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வைக்கப்படும். அதன் அடிப்படையில் மன அழுத்தம் அதிகம் உள்ள மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மனநல ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in