Published : 21 Nov 2017 04:37 PM
Last Updated : 21 Nov 2017 04:37 PM

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சர்ச்சை: காங்கிரஸுக்கு அனந்த் குமார் பதில்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் டிசம்பர் மாதம் நடத்தப்பட்டுள்ளது என, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் 3-வது வாரத்தில் தொடங்கி டிசம்பர் 3-வது வாரம் வரை நீடிக்கும். தற்போது குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை டிசம்பர் மாதம் நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ''நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சீர்குலைக்க மத்திய பாஜக அரசு சதி செய்கிறது'' எனக் கூறினார்.

இதற்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த் குமார் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது

''சட்டப்பேரவை தேர்தல்கள் நடக்கும் போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் மாற்றியமைக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 2008 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம்தான் நடத்தப்பட்டன.

ஆனால் அதை மறந்துவிட்டு காங்கிரஸ் பேசுவது வேடிக்கையாக உள்ளது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் விரக்தியில் உள்ள காங்கிரஸ் இதுபோன்ற புகார்களைக் கூறுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பரில் நடைபெறும், தேதி விரைவில் அறிவிக்கப்படும்'' என அனந்த் குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x