சுதந்திர தினம் | 10-வது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. முன்னதாக, முப்படைகளின் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாட்டின் 77-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. டெல்லி செங்கோட்டையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 26 முதல் செங்கோட்டை வளாகம் எஸ்பிஜி பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 10,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, காலை 7.30 மணி அளவில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த விழாவில் பிரதமர், மூத்த அமைச்சர்கள், முக்கிய பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த 1,800 சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்றனர்.

10-வது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி: கடந்த 2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்தது. அதன் பிறகு நடைபெற்ற 2019 தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. அந்த வகையில் சுதந்திர தினத்தன்று 10-வது முறையாக செங்கோட்டையில் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி. தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவப்பட்டது. நாட்டின் சுதந்திரத்துக்காக இன்னுயிரை துறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டு பேசி இருந்தார்.

மன்மோகன் சிங் சாதனை சமன்: நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சுதந்திர தினத்தை முன்னிட்டு 17 முறை தொடர்ச்சியாக செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி இருக்கிறார். நேருவின் மகள் இந்திரா காந்தி 16 முறையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடர்ச்சியாக 10 முறையும் தேசிய கொடியை ஏற்றி இருக்கின்றனர். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக 10-வது முறையாக இன்று தேசிய கொடி ஏற்றினார். இதன்மூலம் மன்மோகன் சிங்கின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in